WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, March 1, 2009

ஒரு பெண் புலியின் உணர்ச்சிகடிதம் ..........!!!

ஒரு பெண் புலியின் உணர்ச்சிகடிதம் ..........


அன்புள்ள அப்பாவுக்கு!

வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே.

பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சுழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன்.

கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்டி, உடைத்து ஒட்டப்பட்டு, இடம்பெயர்ந்து இயங்கிய எமதூர்த் தபாலகத்தில் இருந்து எமக்குக் கிடைத்தது.

அதில் நீங்கள் எதிர்வு கூறி எழுதியிருந்தவாறு, இங்கு நாளாந்த (அன்றாட) நிலவரம் வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம், ஐந்தாம் மாதம் 23-ம் திகதி எங்களுடைய வீட்டுக்கும், முறிகண்டிச் சந்திக்கும் இடையில் சிறிலங்கா பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் படை நடாத்திய `கிளைமோர்' தாக்குதலால் 6 சிறார்கள் உட்பட்ட 16 பேர் அநியாயமாய் அவலச் சாவடைந்து விட்டதைப் பற்றியும், புதூர் நாகதம்பிரான் கோயில் விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு நேரத்தில் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19-ம் கட்டைப்பகுதியில் `கிளைமோர்' தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பற்றியும் அறிந்து நீங்கள் மிகவும் பயந்ததாகவும், கவனமாக இருக்கும்படியும் எழுதியிருந்தீர்கள்.

அப்பா! அன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மறுதினம் சனிக்கிழமை, மக்கள் வணக்கத்துடன் ஒரே இடத்தில் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டதை என் கண்களால் நேரிற் கண்டேன் என்று நான் உங்களுக்கு எழுதிய மடலை அனுப்பு முன், நானும் அம்மாவும் எமது அக்கராயன்குளப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர வேண்டியவர்களாகி விட்டிருந்தோம்.

அதன் பின் நிகழ்ந்த கோழைத்தனமான - அப்பாவி மக்கள் மீதான சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் பல்வேறு கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்பாகவும், இன்று வரையும் எமது தாயகம் எங்கும் எத்தனையோ சாவடிப்புகள் பல்வேறு வடிவங்களில் சிங்கள அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் போர் உதவிகளுடன் நிகழ்த்தப்பட்டு விட்டன.

கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பங்களாக எமது உறவுகள் பல சிங்கள பேரினவாதப் பூதத்தின் இனப்படுகொலையில் உயிரிழந்து விட்டன. எமது மக்கள் பல்லாயிரக்கணக்கில் வயது வேறுபாடின்றிக் காயப்பட்டு, ஊனமுற்று சிகிச்சை எதுவுமின்றி பட்டினியோடு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்பா! பாருங்கோ, எத்தனை தரம் நாங்கள் அந்தக் கோயிலுக்கு அந்தப் பாதையில் போய் வந்திருக்கிறோம்? நீங்கள் வெளிநாடு போனதன் பிற்பாடு அம்மாவும் நானும் சித்தி வீட்டுக்குப் போகிற போதும், மருத்துவர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குப் போகிற போதும், பல தடவைகள் போய் வந்த பாதை அது.

ஆனால், இங்கு இப்போதுள்ள நிலைமையை நீங்கள் எல்லோரும் தினமும் இணையதளங்களூடாக அறிந்து கொண்டுதானே இருப்பீர்கள்? சில வாரங்கள் முன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்னுடன் படித்த பிள்ளை ஒருவர் எறிகணை வீச்சில் காயப்பட்டு இருந்ததை அறிந்து பார்க்கச் சென்ற போது, நானும் எதிர்பாராத வகையில் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டேன்.

இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. அதில் நான் கூட அகப்பட்டு காயப்பட்டோ, இறந்தோ இருக்கலாம்தானே? அப்பா, நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில், தந்தையும் மூத்த மகனும் அந்த இடத்திலேயே சாக, தாயும் இளைய மகளும் அதே சம்பவத்தில் படுகாயம் அடைந்து அங்கங்களை இழந்து இருக்கிறார்கள்!

அப்பா! ஐம்பத்தெட்டில் நடந்த இனப்படுகொலையின்போது, இலங்கைத்தீவின் தென்பகுதியில் சிறுவர்களாய் இருந்த நீங்களும், அம்மாவும் எவ்வளவு தூரம் துன்பப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்தீர்கள் எனப் பாட்டாவும், அப்பம்மாவும் சொன்ன வரலாற்றுக் கதைகள் இன்னும் பசுமரத்து ஆணியாய் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன.

பின், 77-ம் ஆண்டு இனப்படுகொலையின் போது அண்ணாவுடன் மலைநாட்டிலிருந்தபோது அகதியாகிப் பிரபல பாடசாலையில் உயிருக்கஞ்சி நீங்கள் தஞ்சமடைந்ததும் பிறந்து சில நாட்களேயான பாலகனாய் இருந்த பெரியண்ணா கடும் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் உயிரிழந்ததும் நீங்கள் சொல்லி நான் நன்கு அறிவேன்.

அதன் பின், மீண்டும் 83-ம் ஆண்டு இனப்படுகொலையின் போது, எமது வீட்டிற்குக் காடையர் கூட்டம் தீயிட, ஒருவாறு தப்பிப் பிழைத்து கப்பலில் வடக்கு நோக்கி அகதியாய் அனுப்பப்பட்ட அவலமும், மாற்றுடையின்றி நீங்கள் தவித்ததும், பக்கத்து வீட்டு ஆட்கள் உதவியுடன் குடிசை போட்டு அவர்கள் வளவுக்குள் தாற்காலிகமாய்த் தங்கியதும், பங்கீட்டு அட்டை உணவுக்காகச் சங்கக்கடை வாசலில் விடியுமுன்பே போய் நின்றது பற்றியும் நீங்களும், அம்மாவும் சின்னண்ணாவும் அவ்வப்போது கூறிய அனுபவக் கதைகள் இன்னும் என் மனப் பாறையில் ஆழப் பதிந்து அழியாது உறைந்துள்ளன.

இருபதாண்டுகள் முன், `அன்பு வழி'யில் `பூமாலை'யோடு என்று கூறிக் கொண்டு அயல் நாட்டிலிருந்து வந்திறங்கிய ஆக்கிரமிப்புப் படையினன் ஒருவன், ஒரு நாள், தேசம் காக்கின்ற காவல் தெய்வங்களுக்கு உணவு கொடுத்த ஒரு மூதாட்டி பற்றித் தெரியுமா என்று கேட்டுப் பள்ளி சென்ற அண்ணாவின் காதைப் பொத்தி அடித்ததில், அண்ணாவின் செவிப்பறை வெடித்துக் குருதி கசிந்தது, அண்ணாவுக்கு மறந்திருக்காதுதானே?

அதன் பின், நான் பிறந்த பின்பு குடாநாட்டுக்குள்ளேயே எத்தனை தரம் சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து அலைந்து திரிந்து இருக்கிறோம் என்று உங்களுக்கும் நினைவிருக்கும் தானே?

அப்பா! நீங்களும் அண்ணாவும் உங்களுக்கு ஒரு கடமை, பொறுப்பு இருக்கிறது என்று கூறியபடி அதைச் செய்தீங்கள். ஆனால் நான்...? இதுவரை உங்களதும் அம்மாவினதும் ஆசைப்படி, பல துன்பங்களுக்கு இடையில் படித்து முடித்து விட்டேன். இப்போது பல்கலைக்கழகம் போகக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் யோசித்துப் பாருங்கோ, பல்கலைக்கழகம் போவதற்கு உரிய சூழ்நிலை இருக்கிறதா, போனவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறதா? என்று. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அங்குள்ள அரச படையும், அதன் கூலிப் பட்டாளங்களைச் சேர்ந்தவங்களும் எத்தனை-யெத்தனை மாணவர்களைச் சுட்டுத் தள்ளி விட்டங்களென்று உங்களுக்குத் தெரியுமா?

எத்தனை அப்பாவி மாணவியரை மானபங்கப்படுத்தி இருக்கிறாங்கள் தெரியுமா? யுத்த நிறுத்தம் வந்தபின் சமாதானம் வந்து விட்டது, சுகவாழ்வு கிடைத்து விட்டது, பிரச்னை தீர்ந்தது என்று நீங்களும் மற்றவர்கள் மாதிரி நம்பி நம்பி ஏமாறி இருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்தவர்களே தாக்கப்பட்டதும், தாங்கள், யுத்தத்தைத்தான் கண்காணிப்பதாக அவர்களே அறிக்கை விட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே?

இதைவிட வேறென்ன வேண்டும் இங்கு இருந்த நிலை பற்றிக் கூற? ஆனால் தற்போது, சமரசம் பேசி தூது வந்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராய் இருந்தவரே அண்மையில், எங்கள் தரப்பு, எமது மக்களின் சுயபங்களிப்பிலும் எதிரியிடமிருந்து கைப்பற்றியும் சிறுகச் சிறுகச் சேகரித்த ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறி அறிக்கை விட்டதை அறிந்த போது, எமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குச் சற்று மேற்பட்ட இன்றளவுமான நாட்களுக்குள் இந்த சர்வதேசத்தின் உண்மை முகம் எது என்பதும் உள்நோக்கம் என்னவென்பதும் எமக்குப் புரியவில்லை என்று இனியும் நாங்கள் கூற முடியுமா?

அப்படி நினைத்து, நம்மை நாமே, ஏமாற்றலாமா? உங்கள் தலைமுறைத் தலைவர்கள் போல நம் தலைமுறைத் தலைமையுமில்லை; உங்கள் தலைமுறை போல ஏமாற்றுப்பட நாங்களும் தயாராக இல்லை.

அம்மாவுக்கு ஏனோ நாம் கடைசியாகக் கட்டி வாழ்ந்த நம் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை யதார்த்தம் புரியவில்லை... இல்லையில்லை, புரியாத மாதிரி இருந்திருக்கிறா என்று தான் சொல்ல வேண்டும். அவ கூட இருந்ததால், என்னால் எங்களுடைய தாய்நாட்டுக்குச் சின்னச் சின்னப் பங்களிப்புத்தான் செய்ய முடிந்தது.

பதுங்கு குழி வெட்டுவது, உடுப்புச் சேர்ப்பது, இளநீர் சேர்ப்பது, `கிபிர்' தாக்குதல்களில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது, குருதித் தானம் வழங்குவது போன்றவற்றை மட்டும்தான் இதுவரை நான் செய்து இருக்கிறேன்.

இப்படியான வேலைகளை பொதுவாக எல்லாருமே செய்யலாம். ஆனால், எல்லையில் நிற்க, எல்லாராலும் முடியாது. என்னைப் போல இள வயது ஆட்கள்தான் இப்போ அதற்கு அவசியம் தேவை.

இந்த நிலை என்று மாறுமோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் மாறும். அதற்குரிய காலம் கனிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சந்தேகமே வேண்டாம்... அஞ்சி அஞ்சி... அடங்கி ஒடுங்கி நாம் ஊரூராக ஓடத் தேவை இல்லை. எதிரிக்குப் பயந்து குலை நடுங்கின காலம், காலமாகி விட்டது! நம் சேனைகள் சாணக்கியத்துடன் சாண் இறங்குவது, முழம் முழமாய் முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டுச் சாதனை படைக்கவே!!

சுற்றிவளைப்புகளும், தேடுதல்களும், சித்திரவதைகளும் வன்புணர்வுகளும், அநியாயக் கருவழிப்புகளும், காணாமற் போகச் செய்தல்களும், கடத்தல்களும், கொள்ளையடிப்புகளும், கொத்துக் குண்டு வீச்சுத் தாக்குதல்களும், பதுங்கு குழி வாழ்க்கையும் இனி, நமக்கில்லை!

பட்டினி போட்டு, பாதைகளை மூடி, நோய் தீர்க்கும் மருந்துகளைத் தடை செய்து, மருத்துவ வசதிகளை நிறுத்தி, குண்டுகளை மழையாய்ப் பொழிந்தும், கிளைமோர் தாக்குதலால் அப்பாவிகளைக் கொன்றழித்தும், நம் சுதந்திர தாகத்தை நசுக்கிட எண்ணுபவனுக்கு, நாம் எல்லோரும் இறுதிப் பதிலடியைப் பரிசாகக் கொடுக்கின்ற காலம் கனிந்து, நெருங்கி வந்து விட்டது.

அதற்காக, ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈந்த மாவீரர் கனவை நனவாக்கிடவும், உலகெங்கும் அகதியாய் அலைந்து வாழுகின்ற நம் தமிழர் மானத்துடன் தலைநிமிர்ந்து எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காகவும், நானும் என்னை எதிர்வரும் `மகளிர் எழுச்சி நாள்' முதல் முழுமையாய் முழு நேரப் போராளியாய் மண் மீட்புப் போரிலே இணைத்துக் கொள்ளப் போகிறேன்.

இதுவரை நான் முழு நேரப் போராளியாவதற்கு இருந்த ஒரே தடை எனது வயது. அதுவும் அன்றுடன் தீர்வது உங்களுக்குப் புரியும்தானே? நீங்களும் அண்ணாவும் தாயகம் நீங்கி அகதியாகப் புகலிடம் நாடிப் பனி விழும் தேசமொன்றுக்குச் சென்று ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆகி இருந்தாலும், இவ்வளவு நாளும் இங்கு நடந்த சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், தாக்குதல்கள், மரணங்கள், வீரச்சாவுகள் எல்லாம் பள்ளி மாணவியாய் இருந்த என்னை எத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று உங்களுக்கும் நன்றாக விளங்கும்தானே?

என்னைப் பொறுத்தவரையில், வீட்டிற்கு ஒருவராவது காலமிட்ட கட்டளைப்படி போராடினால்தான் எமது மண் விரைவில் மீட்கப்பட்டு மாணவர் சுமுகமாகக் கற்கக் கூடிய நிலைமை நிரந்தரமாக்கப்படும்.

அப்பா! இப்போதெல்லாம் எமது கிராமத்தவரில், அயல் வீடுகளில், வீட்டுக்கு இரண்டு, மூன்றென மாவீரரும் போராளிகளும் உள்ள குடும்பங்களும் உள்ள நிலையில், வீட்டுக்கு ஒரே பிள்ளையாய் இருந்தும், போராளியாகி உள்ளவர் மத்தியில் அண்ணா இங்கிருந்து செய்யாத பணியை, நானாவது நிறைவேற்றாமல் இருக்கலாமா? அப்படிச் செய்தால், இந்த மண் எம்மை மன்னிக்குமா?

இப்போதும் அம்மா, உங்களையும், அண்ணா, அண்ணியையும், நிழற்படத்தில் மட்டும் பார்த்துள்ள தன் பேரப்பிள்ளைகளையும் எப்போ நேரில் பார்ப்போம் என்று பெரும் ஆவலில் இருக்கிறா. எமக்கருகில் விளையாடித் திரியும் தன் பேரக் குழந்தைகளின் வயதுப் பிஞ்சுப் பாலகர், எதிரியின் தாக்குதல்களில் கண் முன்னே கொல்லப்படும் போதும் காயப்பட்டு குருதி வெள்ளத்தில் மிதக்கும் போதும் அவ படும் பாட்டை எழுத்தில் விவரிக்க என்னால் முடியாது.

அவளுக்கு நான் எது பற்றிச் சொன்னாலும் முன்பு விளங்குவதில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவன் கோத்தபாய தன் படையினரை உற்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் `இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்; அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்' என்று கூறியது அவளுக்கு எல்லாவற்றையும் நன்கு தெளிவாக்கி விட்டது.

தரைப்புலி, கடற்புலி, வான்புலி, கரும்புலி என்று சிறப்புப் படையணிகளுடன் வளர்ந்து பெரு விருட்சமாகியுள்ள எமதியக்கம், தற்போது மக்கள் படை, எல்லைப் படை, மாணவர் படை என்றும் கிளை பரப்பி வியாபித்துள்ளது உங்களுக்கும் தெரியுமென நம்புகிறேன்.

எனக்கும் மனச்சாட்சி இருக்குதானே? நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புதானே? தன்மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனது கடமையும்தானே? தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறது? முதல் மாவீரன் சங்கர் அண்ணா, தியாக தீபம் திலீபன் அண்ணா, முதல் பெண்புலி மாலதி அக்கா, வான் கரும்புலிகள் ரூபன் அண்ணா, சிரித்திரன் அண்ணா உள்பட ஏறத்தாழ இருபத்து நான்காயிரம் மாவீரரும் ஆயிரமாயிரம் போராளிகளும் எமதருமை தேசியத் தலைவரும் இத்தனை இலட்சம் மக்களுக்கும் எதனை எதிர்பார்த்து உள்ளார்களோ, அதனை நிறைவேற்றுவதும் எனது கடமை அல்லவா? மேலும் அப்பா, அண்ணா, அண்ணி, மருமக்களுக்கு எனதன்பைத் தெரிவியுங்கோ. பேரப்பிள்ளைகளுக்கு தமிழை நன்கு கற்பியுங்கோ. அவர்களுக்கு எங்களுடைய வரலாற்றைச் சரியான முறையில் சொல்லிக் கொடுங்கோ. தேசப்பற்றோடு தமிழர்களாய்த் தமிழ் உணர்வுள்ளவர்களாய் வீரமும் மானமும் உள்ள மனிதர்களாய்த் தொப்பூழ்க்கொடி உறவுகளை மறவாதவர்களாய் வளரச் செய்யுங்கோ.

வேறென்ன அப்பா?

இதை எழுதத் தொடங்கும் நேரத்தில்தான் வான் புலிகளின் முதற் கரும்புலித் தாக்குதல் பற்றிய வெற்றிச் செய்தி புலிகளின் குரலினூடாக என் காதுகளில் வந்து வீழ்ந்தது. இப்போது எமக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் அந்தக் கரும்புலிகள் இருவரது நினைவாகவும் வேறு சில மாவீரர் நினைவாகவும் வீரவணக்க நிகழ்வு தொடங்கி விட்டது. `இந்த மண் எங்களின் சொந்த மண்' என்ற பாட்டுக் கேட்கிறது.

அம்மா உள்பட எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். முடிந்தால், மீண்டும் இன்னுமொரு மடலில் சந்திப்போம்.

22.2.09 தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'
இப்படிக்கு,
என்றும் உங்கள் அன்பு மறவாது
தேசம் விடுதலை காண உழைக்கின்ற
அன்பு மகள்,
தேவகி.

No comments: