வன்னியில் இருந்து புலம்பெயர்ந்து வல்வை வந்துள்ளோர் விபரப்பட்டியல்..
January 20, 2010
1133 அங்கத்தவர்கள் கொண்ட 396 குடும்பங்களின் விபரத்தை வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை வெளியீடு செய்துள்ளது..
அடுத்து என்ன செய்யப் போகிறோம்… புலம் பெயர் சமூக ஆர்வலரின் முன் பாரிய கேள்வி…
வன்னியில் இருந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வல்வெட்டித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள 396 குடும்பங்களின் விபரப்பட்டியலை இன்று வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை வெளியீடு செய்துள்ளது.
வல்வெட்டித்துறையின் சகல பகுதிகளிலும் இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு அரசால் வழங்கப்படும் 5000 ரூபா மாதாந்த உதவி கூட கிடைப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குடும்பங்கள் பற்றிய விபரம் அப்பகுதி கிராமசேவையாளர் திரு. எஸ். தேவனேஸ்வரனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடைய அடுத்த கட்ட வாழ்விற்கு இதுவரை எந்தவொரு ஆரோக்கியமான முயற்சிகளும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை.
01. பொருளாதார ரீதியாக நலிந்த நிலை
02. போரினால் ஏற்பட்ட பேரிழப்புக்கள்
03. உடமைகள், உறவுகளை இழந்த பாதிப்பு
04. பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னெடுக்க போதிய ஆதாரமின்மை
05. சுகாதாரமான வாழிடங்கள் இன்மை
06. பெரும் விலையேற்றங்களில் வாழ்வை நகர்த்த முடியாத அன்றாட ஜீவனோபாய போராட்டங்கள்
07. உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படை வசதிகளையே பூர்த்தி செய்ய இயலாத நிலை என்று போரின் பாதிப்புக்கள் இவர்கள் வாழ்வில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது…
தமிழர் தாயகப் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் முகாம்களில் இருந்து மக்கள் இதுபோல குடியேற்றப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு ஊரின் நலன்புரிச் சங்கங்களும் இவ்வாறு தமது ஊரில் குடியேறிய மக்களின் விபரப்பட்டியலை முதலில் சேகரித்து வெளியீடு செய்ய வேண்டும்.
பின்னர் இவர்களுடைய எதிர்கால வாழ்வினை சீரமைக்க வெளிநாடுகளில் உறவுகள் இல்லாத குடும்பங்கள் தனியாக பிரித்தெடுக்கப்பட வேண்டும்.
அக்குடும்பங்களை வெளிநாடுகளில் உள்ள உதவி செய்ய விரும்பும் குடும்பங்கள் ஆளுக்கு ஒரு குடும்பம் என்ற அடிப்படையில் உதவ வேண்டும். சுமார் ஆறு மாத காலங்களுக்கு பொறுப்பெடுத்து ஆரம்ப கட்ட ஆதார உதவிகளை வழங்க வேண்டும்.
அதேவேளை அனைவருக்கும் பொதுவான வேலைத்திட்டங்கள், தொழில்வாய்ப்புக்கள் போன்றன ஏற்படுத்தப்பட வேண்டும்.
சிறு சிறு தொழில் நிலையங்களை ஏற்படுத்தி வாழ்வை செம்மைப்படுத்த ஆவன செய்யப்பட வேண்டும். புலம் பெயர் நாடுகளில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதான கடமையாக இது அமைவது குறிப்பிடத்தக்கது.
முதல் ஆறு மாதங்களின் பின்னர் நிலமைகளை மதிப்பீடு செய்ய வேண்டும், பின்னர் நிலமைக்கேற்ப புதிய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்ற யோசனை தற்போதைக்கு முன் வைக்கப்பட்டுள்ளது.
பெயர், முகவரி, அங்கத்தவர் எண்ணிக்கை என்பன இடம் பெறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment