தன்மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுப்பதையே சிறந்த கொள்கையாக சிறீலங்கா அரசு கருதுகின்றது:அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம்
பதிந்தவர்_ரமணன் on January 22, 2010
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் மறுப்பதையே சிறந்த கொள்கையாக சிறீலங்கா அரசு கொண்டுள்ளது. ஆனால் அரசு அதன் நம்பகத்தன்மையை இழந்து வருவது மிக அதிகமாகி வருவதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
நிர்வாணமாக இழுத்து வரப்படும் தமிழ் இளைஞர்களை சிறீலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்யும் காட்சிகளை பொய் என கூறிவந்த சிறிலங்கா அரச தரப்பு அதிகாரிகள் தற்போது அதனை நிராகரிக்க முடியாத நிலையை அடைந்துள்ளனர் எனினும் அதனை பொய்யானது என அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையானது 1984 ஆம் ஆண்டு என்ற ஜோர்ச் ஓவெல் என்பவரின் நாவலை தவிர வேறு எதனையும் எமது நினைவில் கொண்டுவரவில்லை.
காணொளியில் உள்ள காட்சிகள் பொய்யானவை என சிறீலங்கா அரசு தொடர்ந்து தெரிவித்து வருகின்ற போதும் அதற்கான ஆதராங்களை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை.
உலகெங்கும் நடைபெறும் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியும் காணொளி உண்மையானது என தெரிவித்துள்ளார். உடல்கூற்றியல் நிபுணர், காணொளி ஆய்வாளர், துப்பாக்கி தாக்குதல் தடயவியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்ததாக பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகளால் அருகில் வைத்து சுடப்படும் போது மரணிக்கும் மனிதர்களின் இறுதி நேர துடிப்புக்களை நாம் போலியாக காணொளியில் பதிவுசெய்ய முடியாது என பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும் அல்ஸ்ரனின் கருத்துக்களை நிராகரிப்பதற்கு சிறீலங்கா முயன்றுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறீலங்கா மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தனிப்பட்ட ரீதியாக அல்ஸ்ரன் முயல்வதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறீலங்காவின் இந்த அறிக்கை ஆச்சரியமானது அல்ல. வன்னியில் இறுதியாக நடைபெற்ற மோதல்களில் படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குரல்கொடுக்கும் அமைப்புக்களை எல்லாம் சிறீலங்கா அரசு ஒருபக்கச்சார்பானவர்கள் என தெரிவிப்பதுண்டு. இறுதிக்கட்ட மோதல்களில் 7,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
எமது அமைப்பு உட்பட மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஏனைய அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள், மனிதநேய அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த பல அமைப்புக்கள், ஐரோப்பிய ஒன்றியம், பி.பி.சி செய்தி நிறுவனம், சனல்-4 செய்தி நிறுவனம், மேலும் பல ஊடக அமைப்புக்கள் போன்றவற்றை தனது எதிரிகளாகவே சிறீலங்கா அரசு கருதுகின்றது.
சிறீலங்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த பல அதிகாரிகளும், ஊடகவியலாளர்களும் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பலர் உயர்ந்த விலைகளை செலுத்திவிட்டனர்.
ஆனால் சிறீலங்காவின் இந்த சூழற்சி முறை தற்போது அதற்கான விலையை செலுத்த ஆரம்பித்துள்ளது. இறுதிப்போரை வழிநடத்திய இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகா மகிந்த ராஜபக்சாவை எதிர்த்து அரச தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுகின்றார்.
போரின் இறுதி நாட்களில் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சாவே உத்தரவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கோத்தபயா மகிந்தாவின் சகோதரர். எனினும் தான் தவறுதலாக கூறிவிட்டதாக அவர் பின்னர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் என்ன கூறமுற்பட்டுள்ளார் என்பதை கற்பனை செய்வது கடினமானது.
காணொளியில் நாம் கண்ட காட்சி தனித்துவமானது அல்ல, கடந்த 26 வருடங்களாக நடைபெற்ற இனப்போரில் வழமையாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் சிறு பகுதியே அது. சிறீலங்கா படையினரும், விடுதலைப்புலிகளும் பல படுகொலைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டிக்கப்படவில்லை.
நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர். அந்த இருண்ட நாட்களில் உள்ளூர் பத்திரிகைகளை; வெள்ளை வான் கடத்தல்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக தகவல்களை தேடி விளம்பரங்களை தினமும் பிரசுரித்திருந்தன. கடத்தப்டப்டவர்களின் உறவினர்கள் அந்த விளப்பரங்களை கொடுத்திருந்தனர்.
எவ்வளவு கடினமான முயற்சிகளை மேற்கொண்ட போதும் சிறீலங்கா அதிகாரிகளினால் இறுதியாக நடைபெற்ற கொடுமையான போரில் என்ன நடைபெற்றது என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. அது சிறீலங்காவின் சமூகங்களை தொடர்ச்சியாக பாதித்து வருகின்றது.
genovமனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கொண்டதை போல காணாமல்போனவர்கள் தொடர்பாக நீங்கள் ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொண்டால் உண்மைகள் வெளிவரும். மார்ச் 2008 ஆம் ஆண்டு நாம் வெளியிட்ட அறிக்கையில் சிறீலங்காவில் நடைபெற்ற கடத்தல்கள், காணாமல்போதல் போன்றவற்றிற்கு அரசே பொறுப்பு என தெரிவித்திருந்தோம்.
எமது விசாரணைகளில் காணாமல் போனவர்களின் பல குடும்ப அங்கத்தவர்களுடனும், சாட்சிகளுடனும் பேசியிருந்தோம். அது தொடர்பில் நூற்றுக்கணக்கானவர்களை சந்தித்திருந்தோம். எனவே காணாமல் போதல் மற்றும் கடத்தல்களில் அரசின் நேரடியான தொடர்புகள் உள்ளதை எம்மால் பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
சிறீலங்காவில் நடைபெற்ற ஆயுதப்போரில் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் கணாமல்போதல் தொடர்பில் இது ஒரு சிறு பகுதியே. ஆனால் இதுவரையிலும் யாரும் தண்டிக்கப்படவில்லை.
இறுதியாக நடைபெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொண்டதாக தகவல்கள் இல்லை.
சிறீலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்கள் மீது எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டதுடன், வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க மறுத்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பல அமைப்புக்களின் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அந்த மக்களின் தகவல்கள் வெளியில் தெரியாது இருப்பதற்காகவே போர் நிறைவுபெற்ற பின்னரும் அரசு 300,000 மக்களை தடுத்த வைத்திருந்தது.
மீண்டும் மீண்டும் மறுப்பதையே சிறந்த கொள்கையாக சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால் நம்பகத்தன்மையை சிறீலங்கா இழந்து வருவது மிக அதிகமாகி வருகின்றது.
சிறீலங்காவில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அதேசமயம் அனைத்துலக நாணயநிதியம் சிறீலங்காவுக்கு வழங்கிவரும் கடன் தொகையை சில மாதங்கள் தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா காங்கிரஸ் சபை விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து இறுதிக்கட்ட போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக சட்டவிதிகளின் மீறல்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களம் விடுத்திருந்தது.
போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா கடந்த மே மாதம் போர் நிறைவுபெற்ற பின்னர் அங்கு சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியழித்திருந்தார். ஆனால் அவர் அதனை நிறைவேற்றவில்லை.
தற்போது பந்து பான் கீ மூனின் கையில் உள்ளது. எனவே சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தேவையான சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழுவை அமைக்கவேண்டிய கடமை அவருக்கு உண்டு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WWW.MEENAKAM.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment