முல்லைத்திவில் ஐநா அலுவலர்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்த ஐநா மன்றத்தின் உதவி செயலாளர் நாயகமும், அவசர நிவாரண உதவிகளுக்கான இணைப்பாளருமாகிய கத்தரின் பிரேக் அவர்கள் ரெட்பானா பாரதிபுரம் வித்தியாலயத்தில் அந்தப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களையும் சிவில் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர், வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்று வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் தொழில்வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டிருப்பதனால், அவர்களுக்கான உலக உணவுத் திட்டத்தின் நிவாரண உணவு உதவியை நீடிக்க வேண்டும் என்றும் இந்த மக்களின் முக்கிய வாழ்வாதார தொழில்களாகிய மீன்பிடி மற்றும் விவசாயம் என்பவற்றில் அவர்கள் ஈடுபடுவதற்கான உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் மேகன்ராஜ் அவர்கள் கத்தரின் பிரேக் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மீள்குடியேற்றத்திற்கு அரசாங்கத்தினால் உதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அது போதியதாக இல்லை என அவரைச் சந்தித்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை அவர்களுக்கான உதவிகள் என்பவற்றை நேரடியாகக் கண்டறிந்து ஐநா மன்றச் செயலாளருக்குத் தெரிவிப்பதற்காகவே இலங்கை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment