WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, March 5, 2011

கவிஞர் வாலி வாசித்த கவிதை...இல்லை...வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று...!!!

கவிஞர் வாலி வாசித்த கவிதை...இல்லை...
வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று...அது இது...



“ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு;

அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?

மாமனிதனின் மாதாவே! - நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை

மடி சுமந்தது நாலு பிள்ளை!

நாலில் ஒன்று - உன்

சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் என்றது உன் -

பன்னீர்க் குடம்

உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்

கண்ணீர்க் குடம்

உடைத்துக் காட்டுவேன் என்று...

சூளுரைத்து - சின்னஞ்சிறு

தோளுயர்த்தி நின்றது

நீல இரவில் - அது

நிலாச் சோறு தின்னாமல் -

உன் இடுப்பில்

உட்கார்ந்து உச்சி வெயிலில் -

சூடும் சொரணையும் வர

சூரியச் சோறு தின்றது

அம்மா!

அதற்கு நீயும் -

அம்புலியைக் காட்டாமல்

வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,

தினச் சோறு கூடவே

இனச் சோறும் ஊட்டினாய்;

நாட்பட -

நாட்பட - உன்

கடைக்குட்டி புலியானது

காடையர்க்கு கிலியானது!

'தம்பி! தம்பி!” என

நானிலம் விளிக்க நின்றான் -

அந்த நம்பி;

யாழ் வாழ் -

இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி;

அம்மா!

அத்தகு -

நம்பி குடியிருந்த கோயிலல்லவா -

உன் கும்பி!

சோழத் தமிழர்களாம்

ஈழத் தமிழர்களை...

ஓர் அடிமைக்கு

ஒப்பாக்கி; அவர்களது

உழைப்பைத் தம் உணவுக்கு

உப்பாக்கி;

செம்பொன்னாய் இருந்தோரை -

செப்பாக்கி; அவர்கள் வாழ்வை

வெட்டவெளியினில் நிறுத்தி

வெப்பாக்கி;

மான உணர்வுகளை

மப்பாக்கி;

தரும நெறிகளைத்

தப்பாக்கி -

வைத்த காடையரை

வீழ்த்த...

தாயே உன்

தனயன் தானே -

தந்தான்

துப்பாக்கி!



'இருக்கிறானா?

இல்லையா?”

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத்தமிழர்க்கு -

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!

அம்மா! இந்த

அவல நிலையில் - நீ...

சேயைப் பிரிந்த

தாயானாய்; அதனால் -

பாயைப் பிரியாத

நோயானாய்!

வியாதிக்கு மருந்து தேடி

விமானம் ஏறி -

வந்தாய் சென்னை; அது -

வரவேற்கவில்லை உன்னை!

வந்த

வழிபார்த்தே -

விமானம் திரும்பியது; விமானத்தின்

விழிகளிலும் நீர் அரும்பியது!

இனி

அழுது என்ன? தொழுது என்ன?

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்

கன்ன வயல்களை உழுது என்ன?

பார்வதித்தாயே! - இன்றுனைப்

புசித்துவிட்டது தீயே!

நீ -

நிரந்தரமாய்

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்

தங்க இடம்தராத - எங்கள்

தமிழ்மண் -

நிரந்தரமாய்த்

தேடிக்கொண்டது பழி!”

No comments: