கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து இராணுவம் தாக்குதல்: சரவணபவன் எம்.பி நூலிழையில் தப்பினார்
அளவெட்டியில் இன்று இரவு இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் திடீரெனப் புகுந்த இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கொட்டன்களுடன் வந்த படையினர் கூடியிருந்த பொதுமக்களைத் தாக்கித் துரத்தியதுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க எத்தனித்துள்ளனர். சிப்பாய் ஒருவரின் தாக்குதலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் நூலிழையில் தப்பினார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்றிரவு ஏழு மணியளவில் அளவெட்டியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
கூட்டம் ஆரம்பிக்கின்ற வேளையில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் திடீரெனப் பிரசன்னமாகிய இராணுவத்தினர் பொது மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அச்சுறுத்தியிருக்கின்றனர். பொதுமக்கள் அவர்களை பெரிது படுத்தவில்லை. அங்கிருந்து சென்ற இராணுவத்தினர் சிறிது நேரத்தில் கொட்டன்கள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்து பொதுமக்களை கண்டபடி அடித்து விரட்டினர்.
அவ்வேளையில் மேடையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பேசிக்கொண்டிருந்தார். மேடைக்கு ஏறிய இராணுவ சிப்பாய் ஒருவன் பேசிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஒலிவாங்கியைப் பறித்தபடி அவரைத் தாக்க முற்படவே அவரது மெய்பாதுகாவலர் குறுக்கே பாய்ந்து அவரைக் காப்பாற்றினார். அதிஷ்ட வசமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் காயமேதுமின்றி தப்பிக்கொண்ட போதிலும் அவரது மெய்க்காவலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் மத்தில் பதற்றமும் பீதியுமானதொரு சூழல் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை -
இது ஒரு திட்டமிட்டதொரு தாக்குதல் எனவும், திடீரென என்றால் எவ்வாறு கொட்டன்கள் மற்றும் இரும்புக் கம்பிகளைப் பெற முடிந்தது எனவும் அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தின் முடிவில் தெல்லிப்பளை காவற்றுறை பணிமனைக்குச் சென்ற நாடாளுமன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளது.
Copyright � 2011 Uthayan. All rights reserved.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment