போர் முடிந்தும் அமைதி திரும்பவில்லை: தமிழகத்திற்கு மீண்டும் இலங்கை அகதிகள் வருகை; பலர் வறுமையில் வாடுவதாக தகவல்
Ramanathapuram வெள்ளிக்கிழமை, ஜனவரி 01,
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த போர் கடந்த மே மாதம் முடிவு பெற்றது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனும் கொல்லப் பட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உள்நாட்டுப்போர் நடந்தபோது உயிருக்கு பயந்து அங்கு வாழ்ந்த தமிழகர்கள் பலர் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங் களுக்கு அதிகளாக இடம் பெயர்ந்தனர்.
போர் முடிந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்குள்ள முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், சித்ரவதை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அறிய தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. ஆனாலும் போர் முடிந்த பிறகும் அங்குள்ள நெருக்கடி காரணமாக தொடர்ந்து அகதிகள் வந்த வண்ணம் இருந்தனர். கடந்த செப்டம்பர் 6-ந்தேதி கடைசியாக நார்வே நாட்டை சேர்ந்த இலங்கை அகதி சிவபாலச்சந்திரன் என்பவர் வந்தார். அதன் பிறகு தமிழகத்திற்கு அகதிகள் யாரும் வரவில்லை.
இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவன், ஒரு சிறுமி ஆகிய 5 பேர் முகுந்தராயர் சத்திரம் அரிச்சமுனை கடற்கரைக்கு அகதிகளாக வந்திறங்கினர். தகவல் அறிந்ததும் கடலோர போலீசார் மற்றும் தனிப் பிரிவு போலீசார் விரைந்து சென்று அவர்களை தனுஷ் கோடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த ராஜ்குமார் (வயது60), வினிதா (30), அவரது மகன்கள் சவசியான் (11), எமிசன் (5), மகள் நீராவினி (9) என்று தெரியவந்தது. அவர்களது பெயரை பதிவு செய்த போலீசார் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்த னர். அகதி பெண் வினிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அமைதி திரும்பவில்லை. அங்கு வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுகிறார்கள். கிளிநொச்சியை சேர்ந்த நானும், எனது குழந்தைகளும் பல்வேறு போராட்டங்களை கடந்து இங்கு வந்துள்ளேன். 2 ஆண்டுகளுக்கு முன்பே எனது கணவர் தமிழகம் வந்துவிட்டார்.
இலங்கையில் கடைசியாக நடந்த சண்டையின்போது கிளிநொச்சியில் இருந்து ஒக்கனை பகுதிக்கு நான் குழந்தையுடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது ராணுவத்தினர் எங்களை பிடித்து அங்குள்ள முகாமில் 2 மாதங்களாக அடைத்து வைத்திருந்தனர். அங்கு எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
பின்னர் எங்களை வவுனியா மாவட்டத்தில் உள்ள இலுப்பை முகாமுக்கு மாற்றினர். 2 மாதத்திற்கு முன்பு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். நேற்று தலைமன்னாரில் இருந்து உறவினர் ராஜ்குமார் மற்றும் குழந்தைகளுடன் 1 1/2 பவுன் தங்க சங்கிலியை விற்று படகு கட்டணமாக கொடுத்து இங்கு வந்து சேர்ந்தோம். இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் தமிழர்கள் யாருக்கும் வாக்களிக்கமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் 2009 டிசம்பர் 31 வரை நேற்று வந்த 5 பேரையும் சேர்த்து மொத்தம் 24 ஆயிரத்து 300 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இதில் 3,500 பேர் மண்டபம் முகாமிலும் மற்றவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 130 முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.maalaimalar.com
digg del.icio.us newsVine 2010, © Malar Publications Ltd. | Powered by VPF
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment