WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, May 22, 2010

இதயம் பிளக்கும் இன்றைய இலங்கை! மீதித் தமிழனும் மெள்ளச் சாவான்..: சுரேஷ் பிரேமச்சந்திரன் செவ்வி..!!!

இதயம் பிளக்கும் இன்றைய இலங்கை! மீதித் தமிழனும் மெள்ளச் சாவான்..: சுரேஷ் பிரேமச்சந்திரன் செவ்வி
[ சனிக்கிழமை, 22 மே 2010, 09:23.02 AM GMT +05:30 ]

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது இலங்கைப் படைகளினால் சூழப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு, கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த வாரம் சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து திரும்பியுள்ள த.தே. கூட்டமைப்பு எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன். சென்னையில் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 14 எம்.பி-க்கள் இருக்கும்போது, நீங்கள் ஒருவர் மட்டும் முல்லைத்தீவுக்குச் சென்று வந்தது எப்படி?

புதிய எம்.பி-க்கள் அனைவரும்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி கேட்டோம். ஆனால், இழுத்தடித்தனர். 'பூடானில் சார்க் மாநாடு முடிந்த பிறகு போகலாம்' என்றது இலங்கை அரசு. அது முடிந்த பிறகும் அனுமதி வரவில்லை. இப்படி, கூட்டமைப்பு எம்.பி-க்கள் சேர்ந்து செல்வது தள்ளிக்கொண்டே போக... நான் எங்கள் கட்சியினருடன் சேர்ந்து கிளிநொச்சி ஊடாக முல்லைத்தீவுக்குச் சென்று வந்தேன்.

எந்த வழியாகச் சென்றீர்கள்? வழியில் இராணுவத் தடைகள் இருந்தனவா?

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆனையிறவு, கிளிநொச்சி, மாங்குளம் ஊடாக முல்லைத்தீவு சென்றோம். வழியெங்கும் பல இடங்களில் இராணுவத்தினர் உள்ளனர். படை முகாம்களும், சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன. மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் ஒரு பெரிய சோதனைச் சாவடி. அங்கே வாகன இலக்கத்தைப் பதிவுசெய்துகொண்டு, பயணத்தைப்பற்றிக் கேட்டார்கள். முல்லைத்தீவு மாவட்ட அரசு அதிபரைச் சந்திக்கச் செல்வதாகக் கூறியதும் விட்டுவிட்டார்கள்.



எங்கெங்கே சென்றீர்கள்? இப்போது, அந்த இடங்கள் எப்படி உள்ளன?

கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரம், தண்ணீரூற்று, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு ஆகிய இடங்களைப் பார்த்தோம். சுமார் மூன்று லட்சம் வீடுகள் இருந்த இரண்டு மாவட்டங்களில், பெரும்பாலான கட்டடங்கள் முற்றிலுமாகச் சேதம் அடைந்துள்ளன. மாவட்ட அரச அதிபர் கட்டடம் போன்ற சில இடங்களில்தான் பாதிப்பு இல்லை!

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமை என்ன?

'மீள்குடியேற்றப்பட்ட' என்று சொல்வதைவிட, 'முகாமில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட' என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். சொந்த ஊருக்குத் திரும்பினார்களே தவிர, அங்கே சொந்த வீடுகளே இல்லை. 99 சதவிகிதம் பேரின் வீடுகள் முழுதுமோ, பயன்படுத்த முடியாத அளவுக்கோ இராணுவத் தாக்குதலால் தகர்க்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய கல் வீடுகளில் வாழ்ந்தவர்களும் இப்போது மரத்தடிகளில்தான் சுருண்டு கிடக்கிறார்கள். ஊர் திரும்புவோருக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் சார்பில், 5,000 ரூபாய் பணம் கொடுக்கின்றனர். வீடுகளைச் செப்பனிட இந்தத் தொகை கொஞ்சமும் போதாது. அகதிகள் ஆணையம் வழங்கும் 10 தகரங்களையோ தார்ப்பாலினையோ வைத்து டென்ட் அடித்துக்கொண்டு, அதில்தான் மக்கள் பசியில் கிடக்கின்றனர்!

மக்கள், வயிற்றுப் பசியாற என்ன செய்கிறார்கள்?

இரண்டு மாவட்டங்களிலும் விவசாயமும் மீன்பிடியும்தான் தொழில்கள். இங்குள்ள 75 சதவிகித மக்கள் உழைத்து வளமாக வாழ்ந்தவர்கள். இன்று அடிமட்டத்துக்கு வந்துவிட்டார்கள். ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெல் பயிரிடப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் 10 ஏக்கர், 20 ஏக்கர் என்று பயிர்செய்து வந்தனர். ஏராளமான காய்கறிகளையும் பயிரிட்டு வட மாகாணம் முழுவதும் கொடுத்தவர்கள் அவர்கள். ஆனால், அவர்களால் அங்கு இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. விதை நெல் கிடையாது, உரம், கிருமிநாசினிக்கு வழி இல்லை, உழைக்கக் கருவிகள் இல்லை. உணவுக்கும் வழி இல்லை.



பல விவசாயிகளின் நிலங்களில் இராணுவம் முகாம்கள் அமைத்துவிட்டது. பல இடங்களில் இராணுவ நிரந்தர முகாம்களுக்காக, பெரும் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதில், விவசாய நிலங்களும் அடக்கம். மேலும், மாடுகளையும் அபகரித்துவிட்டார்கள். பல பகுதிகளுக்குச் செல்லவிடாமல் மக்களை இராணுவம் தடுப்பதால், காணாமல்போன மாடுகளைத் தேடவும் வாய்ப்பு இல்லை. நீண்டகாலம் உரிமையாளரின் பராமரிப்பு இல்லாததால், அந்த மாடுகள் கட்டாக்காலி மாடுகளாகத் திரிகின்றன. இவற்றில், கணிசமானவற்றை இராணுவத்தினரின் பண்ணைகளில் பார்த்ததாகக் கூறிய மக்கள், அதைக் கேட்கும் துணிவின்றி நிற்கிறார்கள்.

மீனவர்களின் நிலையும் படுமோசம். அவர்களுக்கு வலையோ, படகு இயந்திரமோ எதையும் வழங்கவில்லை. மீன்பிடிக்க பல இடங்களில் அனுமதி அளித்ததாக அரசு கூறுகிறது. ஆனால், வற்றாப்பளை என்ற மீனவக் கிராமத்தில் நந்திக்கடலை ஒட்டி, குறிப்பிட்ட பகுதியில் (கடைசிக்கட்டப் போரில் மக்கள் அரசுப் பகுதிக்கு நடந்து வந்த பகுதி இது) மட்டும்தான் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதுவும் நடந்தே சென்று மீன்பிடிக்கக்கூடிய சிறிய பகுதியில் மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளதால், அதிகம் பேர் குவிய... குறைவான மீன்களே கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு இலங்கைப் பணத்தில் 100, 150 ரூபாய் வரை கிடைத்தாலே பெரிய விஷயம். (இந்திய மதிப்பில் 50 முதல் 75 ரூபாய் வரை) ஒரு சிறிய குடும்பத்துக்கே இந்தத் தொகை போதாது. குழந்தை உள்ள குடும்பத்தினர், வாரம்தோறும் உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சீனியை விற்று, அதன் மூலம் குழந்தைகளுக்குப் பால் மாவு வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை!

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்... ஆனால், உரிய முறையில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக அரசுத் தரப்பு கூறுகிறதே?

இதற்கு நான் ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும். கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்திபுரம் என்று ஒரு கிராமத்தில், 400 குடும்பங்கள் முன்பு இருந்தன. இவர்கள் முகாம்களில் இருந்து வந்ததும், 100 குடும்பங்களுக்கு மட்டும் கல்வீடுகள் கட்டித் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர்களை அங்கே வசிக்கவிடாமல் மீண்டும் முகாம்களுக்கே அனுப்பி விட்டனர். மேலும், முகாம்களில் இருந்து ஊருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 கொடுக்கப்படுவது தவிர, 20 ஆயிரம் ரூபாய் வங்கியில் போடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி வங்கியில் பணம் செலுத்தப்பட்டு, பாஸ் புத்தகம் எதுவும் யாருக்கும் இதுவரை வழங்கப்படவில்லை!



இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் ஆயிரக்கணக்கான வாகனங்களை விட்டுச்சென்றார்களே... அவற்றின் கதி..?

எனக்குத் தெரிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 35 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள், 10 ஆயிரம் டிராக்டர்கள் இருந்தன. அவற்றைக் கேட்டபோது, புலிகள் அழித்துவிட்டதாக முதலில் இராணுவம் கூறியது. நாங்கள் பலமுறை இதுகுறித்து முறையிட்ட பிறகு இப்போது, 100 மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகவும், பெற்றுக்கொள்ளலாம் என்றனர். ஆனால், மொத்த வாகனங்களையும் இராணுவத்தினர் உதிரிப்பாகங்களாகப் பிரித்து விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடைசியாகப் போர் நடந்த கடலோரப் பகுதியில் என்ன பார்த்தீர்கள்?

இராணுவத் தாக்குதல் நடந்த முள்ளிவாய்க்கால், மாத்தளன் கடல்பகுதியை இராணுவம் தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறது. மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு என்னை அனுமதித்த படையினர், ஒட்டுசுட்டான் சந்தி என்ற இடத்துக்கு மேல் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் என்று நான் கூறியும், 'உங்களுக்கு மாவட்ட அரச அதிபரைச் சந்திக்கத்தான் அனுமதி உள்ளது' என்று தடுத்துவிட்டார்கள். அதற்கு, அங்கே கண்ணிவெடிகளை அகற்றுவதாக அரசுத் தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.

அங்கு கண்ணிவெடி அகற்றப்படுவது உண்மை தானா? இதுபற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

வற்றாப்பளை கிராமத்தில் மட்டும் 15 பேர்கொண்ட குழுவினர் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல, எல்லாக் கிராமங்களிலும் கண்ணிவெடி இருக்கவேண்டும் என்பதில்லை. அப்படிச் சொல்வது தவறு. ஓரிரு இடங்களில் கண்ணிவெடிகளை புலிகளும் வைத்திருக்கலாம், இராணுவமும் தற்காப்புக்காக வைத்திருக்கலாம். ஆனால், கடைசிக் கட்டத் தாக்குதல் நடத்தப்பட்ட மாத்தளன், முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் நின்ற மக்கள், தங்கள் நகைகளையும் உடைமைகளையும் அங்கு பல இடங்களில் புதைத்துவைத்துள்ளனர். அவற்றை இராணுவத்தினர் எடுத்துக்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்தார்கள். இலங்கை இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டு வலுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின் தடையானது சந்தேகங்களை வலுவாக்குகிறது! என்று கவலை வார்த்தைகளில் இறக்கிவைத்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி!

தங்கமும் தலைவரும் - 'ஜி15' மகிந்த!

மூன்றாம் உலக நாடுகளின் ஒரு கூட்டமைப்பாக 'ஜி 15' நாடுகள் அமைப்பு கடந்த 1989-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் புதிய தலைவராக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே பதவி ஏற்றுக் கொண்டார். உலக அளவில் இலங்கை அரசின் மீது போர்க் குற்றம் வலுவாகச் சுமத்தப்படும் நிலையில், மகிந்தவுக்கு 'ஜி 15' தலைவர் பதவி கிடைத்துள்ளதை, அந்நாட்டு அரசாங்கத் தரப்பில் பெரிய சாதனையாகக் கொண்டாடுகிறார்கள். உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் இதைவைத்து தன் குரலை ஓங்கி ஒலிக்கும் முயற்சியிலும் ராஜபக்ஷே குடும்பம் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில், இன்னும் ஓர் அதிர்ச்சியான தகவல்... மகிந்தவின் பதவி ஏற்புக்கு முன்பு, பாளம் பாளமாகத் தங்கக் கட்டிகள் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பதுதான் கொழும்பு கோல்டு மார்க்கெட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக். வாரி வழங்கியவர்கள் வாயைத் திறந்து சொல்லாமலா இருப்பார்கள்?

நடுங்க வைக்கும் நேரடி சாட்சி

முள்வேலி முகாம்களில் இருந்து ஊர்களுக்கு அனுப்பப்படும் மக்களுக்கு ஐ.நா. சார்பில் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. ''ஐ.நா. கணக்குப்படி, 80 ஆயிரம் பேர் முகாம்களில் இருக்கின்றனர். இவர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் அளிக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களில் 60 சதவிகிதம் பேர்களின் வீடுகள் அதிகம் சேதம் அடைந்துள்ளன. மீண்டும் வீடு கட்டவும் விவசாயம், மீன்பிடிக்கான உதவிகளைச் செய்துதரவும் 337 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை. ஆனால், இதில் 24 சதவிகிதத் தொகைதான் கிடைத்துள்ளது. இதனால், ஐ.நா-வின் நிவாரணப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



ஊருக்கு அனுப்பப்படும் மக்களுக்கு ஐ.நா. தரப்பில் குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் என வழங்கப்படுகிறது (அரசு தருவது அதில் பாதிதான்). நிதிப் பற்றாக்குறையால் இந்த நிதி, கடந்த மார்ச்சுடன் முடிவடைந்துவிட்டது. இலங்கையில் உள்ள ஐ.நா. அதிகாரிகள் நிலைமையை எடுத்துச்சொன்ன பிறகு, ஐ.நா. சார்பில் சிறப்பு நிதியுதவி பெற்று, மீண்டும் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதேபோல், முகாம்களில் தொண்டுசெய்த உதவி நிறுவனங்களும் நிதிப் பிரச்னையால் பணிகளை இடையில் நிறுத்திவிட... நெருக்கடியைச் சமாளிக்க, ஐ.நா-வின் அவசர கால நிதியத்தில் இருந்து 14 பில்லியன் டொலர் பெறப்பட்டன. முகாம்களில் உள்ளவர்களுக்கும், அனுப்பப்படுகிறவர்களுக்கும் நிவாரண உதவிகள் தொடருமா என்பது இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. கையிருப்பைக் கொண்டு ஜூன் முடியும்வரைதான் நிவாரணங்களைச் செய்ய முடியும்!'' என்று இலங்கையில் ஐ.நா-வின் மனிதாபிமானப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி நீல் புனே வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

பண்டார வன்னியன் நடுகல் உடைப்பு!



பிரித்தானியர்களை எதிர்த்து பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னர் 1803-ம் ஆண்டில் கடைசியாகப் போரிட்டு மடிந்தார். அவரின் நினைவாக, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அருகில் கற்சிலைமடு என்ற இடத்தில், ஒரு நடுகல் வைக்கப்பட்டது. பண்டார வன்னியனின் வீரத்தை, அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்சொல்லும் அந்த நடுகல்லையும் உடைத்து, இலங்கை இராணுவத்தினர் சிங்கள இனவெறியைக் காட்டியுள்ளனர்.

பட்டினிக் கொடுமையில் ஈழத் தமிழர்!



கொழும்புவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடம் பேசியபோது, ''இரண்டு மாதங்களுக்கு முன்பே ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள், நிதிப் பற்றாக்குறைபற்றி வெளிப்படையாகவே எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இலங்கை அரசு, பாதுகாப்புக் காரணத்தைக் காட்டி, ஐ.நா-வைத் தவிர, மற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களை உள்ளேவிட மறுக்கிறது. அனுமதி கிடைத்தால், மற்ற சர்வதேச நிறுவனங்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடத் தயாராக உள்ளன. ஆனால், அந்த உதவி தமிழர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்று தன் நிலையில் சிங்கள அரசு பிடிவாதமாக இருக்கிறது.

முகாம்களில் உள்ள அனைத்து மக்களையும் ஊர்களுக்கு அனுப்பினால், முகாம் பிரச்சினை தீர்ந்துவிடும். ஆனாலும், சொந்த ஊரில் மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு அரசு ஒன்றும் செய்வதாக இல்லை. ஏற்கெனவே, ஊர் திரும்பியவர்களுக்கும் இதுவரை எதையும் செய்யவில்லை. 'நிவாரணமும் செய்ய மாட்டோம்... செய்வோரையும் விட மாட்டோம்' என்னும் மறைமுகக் கொள்கையை அரசு கடைப்பிடிக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது. அரசின் இந்தப் போக்கு தொடர்ந்தால், மீளக் குடியேற்றப்படும் மக்கள் பட்டினிக் கொடுமைக்கு ஆளாவார்கள்.

போரினால் சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள், நோய்களுடன் நடமாடிக்கொண்டு இருக்கும் முதியவர்கள் நிச்சயம் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். இதை ஐ.நா-வின் உதவி நிலை அதிகாரிகளே உறுதியாகக் கூறுகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளைப்போல, செத்துப்போகாமல் மீதம் இருக்கும் ஈழத் தமிழ் மக்களும் அன்றாடம் சாவைத் தழுவும் நிலை ஏற்படும்.'' என்றார்கள் பரிதாபமாக!


Copyright 2005-10 © TamilWin.com, All rights reserved.

No comments: