மட்டு. ஏறாவூரில் தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் வீடுகள் முஸ்லீம்களினால் அபகரிப்பு.
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 04:04.51 PM GMT +05:30 ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் எல்லைப்பகுதியான ஏறாவூர் 4ம் குறுச்சியில் உள்ள தமிழ் குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முஸ்லீம்கள் அபகரிப்பதற்கு திட்டமிட்டு வருகிறார்கள் என அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் இருந்த 57 குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு தமிழ் முஸ்லீம் கலவரங்களை அடுத்து பாதிக்கப்பட்டு வேறு இடங்களில் இடம்பெயர்ந்திருந்தனர்.
பின்னர் சமாதான சூழல் ஏற்பட்டபோதும் தமிழர்களின் வீடுகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் முகாமிட்டிருந்ததால் கடந்த 20 வருடங்களாக அவர்கள் அயல்கிராமங்களில் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலேயே வசித்து வருகின்றனர்.
தற்போது அந்த இடத்தில் ஒருசில வீடுகளை தவிர மற்றவை அனைத்தும் தரைமட்டமாக நிர்மூலமாக்கப்பட்டு விட்டன. உடைக்கப்படாது இருக்கும் வீடுகளில் பொலிஸ் காரியாலயமும், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும் இயங்கி வருகிறது.
பொலிஸ்நிலையத்தை முன்பிருந்த இடத்திற்கு மாற்றிவிட்டு தங்களுடைய வீடுகளை திருப்பி தருமாறு பொதுமக்கள் கோரிய போது முன்னர் பொலிஸ்நிலையம் இருந்த இடத்தில் பள்ளிவாயலும் பாடசாலையும் அமைப்பதற்கு ஏறாவூர் முஸ்லீம் பிரமுகர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தமிழ் மக்களின் காணிகளிலேயே பொலிஸ் நிலையத்தை நிரந்தரமாக அமைப்பதற்கும் அருகில் முஸ்லிம்களையே குடியேற்றுவதற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முயற்சிகள் எடுப்பதாக தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த விடயத்தை கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தெரியப்படுத்தி அவர் நேரில் வந்து பார்த்துவிட்டு போனதாகவும் தங்களது காணிகளை மீட்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லையென்றும் அப்பிரதேச தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பிரதேச செயலாளருக்கு பலமுறை அறிவித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை எனவும் பிரதேச செயலாளர் இதுவிடயமாக கூட்டமொன்றை கூட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அழைப்பு விடுத்தாலும் குறித்த அதிகாரி கூட்டத்திற்க சமூகமளிப்பதில்லை எனவும் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு கிழக்கு வீடமைப்பு மீள் நிர்மாணத் திட்டத்தின்கீழ் (NEHRP) கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 776 வீடுகளை மீள் நிர்மாணம் செய்யப்படும் எனவும் இவற்றில் இவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினார்கள் ஆனால் குறித்த பகுதியில் எந்தவொரு தமிழருக்கும் வீடுகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இதே பிரதேசத்தில் வசித்த முஸ்லிம்களுக்கு இவ்வீடுகள் வழங்கப்பட்டுள்ளதை கீழேயுள்ள படங்களில் காணலாம்.
எனவே இன ஒற்றுமை நல்லுறவு என பேசுகின்ற முதலமைச்சரும் அவரை சார்ந்தோரும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களும் குறிப்பாக தமிழர்களின் வாக்கு பலத்தால் பாராளுமன்றம் சென்ற பிரதி அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா அவர்களும் இந்த தமிழ் மக்களின் காணிகளை மீட்டு கொடுத்து அவர்களை அவர்களின் சொந்த இடத்தில் வாழ வைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இந்த காணிகளை அபகரித்து காவல் நிலையம் அமைக்கவும் சுற்றிவர முஸ்லிம்களை குடியமர்த்தவும் அயராது பாடுபடுகிறார்கள் இதுதானா இவர்களின் இன ஒற்றுமை என தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வறுமையில் வாடுகின்ற இந்த தமிழர்களிடம் அதிக பணம் தருகிறோம் உங்கள் காணிகளை தாருங்கள் என பல முஸ்லிம் பிரமுகர்கள் சொந்தரவு செய்வதோடு ஒரு முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் பலாத்காரமாக காணிகளை தரும்படி அச்சுறுத்தலும் விடுவதாக தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
முஸ்லிம்களின் வாழ்வியல் விழுமியங்களை பற்றி ஆராய்ச்சி செய்வதோடு அவர்களின் கலாச்சாரத்தை விருத்தி செய்வதற்கும் தமிழர்களின் குடியிருப்புக்கு மத்தியிலும் பள்ளிவாயல்களை அமைக்கவும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக இருக்கும் சிவகீதா பிரபாகரன் முயற்சி செய்து வருகிறார் என்றும் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Copyright 2005-10 © TamilWin.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment